• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார்


மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தமான ஒன்று. கோடைகாலத்தில், இந்த மூன்று காய்களும் தாராளமாக கிடைப்பதால், அனேகமாக எல்லோர் வீட்டிலும் வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் கண்டிப்பாக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

மாங்காய் - 1 (நடுத்தர அளவு)
முருங்கைக்காய் - 1
பலாக்கொட்டை - 5 முதல் 6 வரை
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1 கப்
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிப்பதற்கு:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைப்போட்டு, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பலாகொட்டையை குறுக்கே இரண்டாக வெட்டி, அதன் மேலுள்ள வெள்ளைத் தோலை நீக்கி, 2 கப் நீரில் போட்டு வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

முருங்கைக்காயை 2 அல்லது 3 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். மாங்காயை கொட்டையுடன் நான்கு அல்லது 5 துண்டுகளாக விட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகள், வேக வைத்த பலாகொட்டை, தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் வேக விடவும். பின்னை அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து மாங்காய் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். மாங்காய் சீக்கிரம் வெந்துவிடுமாகையால், முருங்கைக்காய் சற்று வெந்ததும்தான் மாங்காயைச் சேர்க்க வேண்டும். மாங்காயை முதலிலேயே சேர்த்தால், மாங்காய் வெந்து கரைந்து விடும்.

காய்கள் வெந்தவுடன், புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் வெந்தப் பருப்பை கடைந்து சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, இறக்கி வைக்கவும்.

3 கருத்துகள்:

சந்தனமுல்லை சொன்னது…

மூன்றும் கலந்த இந்த சாம்பாரின் மணமே தனி..சுவையும் அலாதி!

ஞாபகம் வருதே... சொன்னது…

பலே..பலே...சூடான பொல பொல சாதத்தை குழி செய்து கொண்டு சாம்பாரும் காயுமாக விட்டு நிரப்பி ஊறியதும் ஊராததுமான மாவடுவுடன் கலந்து ஒரு பிடி பிடித்தால்...ஆஹா...சக்கரையாவது...ப்ரஷராவது...பிறகு மாத்திரை போட்டுக் கொள்ளலாம்..இப்போது ஒரு கை பார்க்கலாம் என இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

சந்தனமுல்லை தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ஞாபகம் வருதே, ஆகா.. அருமை. தங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன், சூடான சாதத்தை சுவையான சாம்பாருடன் ஒரு வெட்டு வெட்டியதைப் போல் ஒரு திருப்தி. நன்றி நண்பரே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...