• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

இனிப்பு போளி


போளி, பண்டிகை நாட்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம். இப்பொழுது பல வகையான இனிப்பு போளிகள் செய்யப்படுகின்றன. ஆனாலும் தேங்காய் போளி, பருப்பு போளி இரண்டும் பரவலாக எல்லோராலும் செய்யப்படுபவை. இதை சாதரணமாக மைதா மாவில்தான் செய்வார்கள். நான் இதை கோதுமை மாவில் செய்தேன். சுவை நன்றாகவே இருந்தது.

தேவையானப்பொருட்கள்:

மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
நல்லெண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணையைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.

வாழை இலைத்துண்டு அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணையைத் தடவி, அதில் ஆரஞ்சு பழ அளவு மாவை வைத்து தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, அதை திருப்பி வைத்து, விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.

இதே போன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம். மாவின் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை போட்டு அதன் மேல் சப்பாத்திக்கட்டையால் உருட்டினால் ஒட்டாமல் வரும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...