• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தவலை வடை


தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்
பயத்தம் பருப்பு - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
அரிசி - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக வெட்டியது) - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கொத்துமல்லித் தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடிகட்டி விட்டு, முதலில் அரிசியையும், உளுத்தம் பருப்பையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் மிளகாயையும் சேர்த்து அரைக்கவும். மாவு பாதி மசிந்ததும், கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். கடைசியில் பயத்தம் பருப்பைப் போட்டு, எல்லாவற்றையும் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவில், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போடவும். தேங்காய்த் துண்டுகள், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு சிறு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் அதை மாவில் சேர்த்துக் கலக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வடை போல் தட்டி, எண்ணையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: அவரவர் தேவைக்கேற்றாற்போல் மிளகாயைக் ஒன்றிரண்டு கூட்டியோ, குறைத்தோ உபயோகிக்கவும். அரை கப் ஜவ்வரிசியை ஊற வைத்தும் மாவில் கலந்து வடை சுடலாம். சுவையாக இருக்கும்.

மேற்கூறியுள்ள அளவிற்கு, சுமார் 25 வடைகள் கிடைக்கும்.

3 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப அருமை , நானும் நோன்பு காலங்களில் தினம் செய்யும் வடை பஜ்ஜி களில் செய்வது ஆனால் கடலை பருப்பு தவிர மற்ற பருப்புகள் கால் கால் டம்ளர் தான் சேர்ப்பேன். உங்கள் முறையிலும் செய்து பார்க்கிறேன்.

கமலா சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தவலை வடை எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்வதால் சத்தானது. மேலும் இது சற்று மிருதுவாகவும் இருக்கும். இந்த மாவில் சிறிது தண்ணீரைச் சேர்த்து, சிறு அடைகளாக தோசைக்கல்லிலும் போட்டு சுட்டெடுக்கலாம். தவலை அடை என்று அழைப்பார்கள்.

Jaleela Kamal சொன்னது…

ஆமாம் கமலா நானும் இது போல் அடை வார்ப்பேன், பதிலுக்கு நன்றி. வாங்க என் பக்கமும் வந்து பாருங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...