• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

எரிசேரி


கேரளத்தில் "எரிசேரி" என்றழைக்கப்படும் இந்த கறி, தமிழகத்தின் "கூட்டு" போன்றதுதான்.  இதில் வாழைக்காய், சேனை, பலாக்காய், பூசணிக்காய், காராமணி பயறு போன்றவற்றைச் சேர்த்து செய்வார்கள்.  நான் வாழைக்காய், சேனை, காராமணி சேர்த்து செய்துள்ளேன்.

தேவையானப்பொருட்கள்:

வாழைக்காய் - பாதி
சேனைக்கிழங்கு - ஒரு நடுத்தர அளவு துண்டு
காராமணி பயறு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைத்தெடுக்க:

தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

கராமணி பயறை 4 முதல் 5 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) ஊறவைத்து, கழுவி விட்டு, ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து குக்கரில் 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

வாழைக்காய், சேனை ஆகியவற்றைக் கழுவி, தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  வாழைக்காய் மற்றும் சேனை துண்டுகள் இரண்டும் சம அளவிற்கு இருக்க வேண்டும்.  பாதி வாழைக்காய்க்கு ஒரு கப் துண்டுகள் கிடைக்கும்.  அதே அளவிற்கு (1 கப்) சேனைத் துண்டுகளையும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.  அத்துடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரைச் சேர்த்து வேக விடவும்.  காய் மிருதுவாக வெந்ததும், கரண்டியின் பின்புறத்தால் சற்று மசித்து விட்டு, அத்துடன் வேக வைத்துள்ள காராமணி, மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை  வேக விட்டு இறக்கி வைக்கவும்.

பின்னர் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டிக் கலந்து விடவும்.

1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலை, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் பொன்னிறமாக வறுத்து, அதன் மேல் தூவி விடவும்.

சூடான சாதத்துடன் சேர்த்து, பொரித்த அப்பளத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஓட்ஸ் குல்ஃபி


தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பால் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
காய்ச்சி ஆறிய பால் - 2 கப்

செய்முறை:

மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கி, அடுப்பில் வைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறி, இறக்கி ஆற விடவும்.
 
ஆறியதும் குல்ஃபி அச்சில் ஊற்றி, ஃபிரீசரில் வைத்து 3 முதல் 4 மணி நேரம் உறைய விடவும். 
 
 
குல்ஃபி அச்சு இல்லெயென்றால், ஒரு சிறி அலுமினிய டிரேயில் ஊற்றி, மேலே அலுமினிய காகிதத்தால் மூடி உறைய விடலாம்.  அதுவும் இல்லையென்றால், ஒரு சிறிய டிபன் பாக்ஸில் ஊற்றி மூடி வைத்து செய்யலாம்.
 
பரிமாறு முன், குல்ஃபி அச்சை வெளியே எடுத்து, குழாய் தண்ணீரில் காட்டி விட்டு, மூடியைத் திறந்து ஒரு கத்தியால் சற்று நெம்பி விட்டால், எளிதாக குல்ஃபி அச்சிலிருந்து வந்து விடும்.
 
பின்குறிப்பு:

1. நன்கு காய்ச்சி ஆறிய பாலை உபயோகப்படுத்தவும்.

2. குயிக் குக்கிங் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, பொடித்து அந்த பொடியை சேர்க்கவும். பதப்படுத்தாத முழு ஓட்ஸ் என்றால், வெறும் வாணலியில் போட்டு சற்று வறுத்து விட்டு பொடிக்கவும்.
 
3. நான் MTR பாதாம் பீஸ்ட் பவுடரை இதில் சேர்த்துள்ளேன். அதிலேயே, பாதாம், பால் பவுடர், ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் சேர்ந்திருப்பதால், தனியாக வேறு எதையும் சேர்க்கவில்லை. எந்த பிராண்ட் பாதாம் டிரிங்க் பவுடரையும் உபயோகிக்கலாம். இல்லையென்றால், சாதாரண பால் பவுடரைச் சேர்த்து, வாசனைப் பொருட்களையும் தனியாகச் சேர்த்து செய்யலாம்.

4. எளிதாக செய்ய வேண்டுமெனில், கடைகளில் ரெடிமேடாக "குல்ஃபி மிக்ஸ்" கிடைக்கிறது. அதை உபயோகித்தும் செய்யலாம்.

பலாப்பழ அல்வா மற்றும் பாயசம்

இது பலாப்பழ சீசன்.  இப்பொழுது கிடைக்கும் பழத்தை உபயோகித்து, பலாப்பழ விழுதை செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது, "இனிப்பு இலை அடை", "கொழுக்கட்டை", "பாயசம்" என்று விதவிதமாக சமைக்கலாம். பெரும் அளவில் செய்ய முடியாவிட்டால், தேவைக்கேற்ற பலாச்சுளைகளை வாங்கி சிறு அளவில் செய்யலாம்.

பலாப்பழ விழுது
  

தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளை - 10 முதல் 15 வரை
பொடித்த வெல்லம் - 1 கப்
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:

பலாச்சுளையிலிருந்து, கொட்டையை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் 1/4 தண்ணீர் சேர்த்து, பிரஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.  இதை மைக்ரோவேவ் அவனிலும் அல்லது திறநத பாத்திரத்திலும் வேக வைத்தெடுக்கலாம்.  வெந்தப் பலாச்சுளை சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

விழுது எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சம அளவிற்கு வெல்லம் சேர்க்க வேண்டும்.  மேற்கூறிய அளவிற்கு ஒரு கப் வரை விழுது கிடைக்கும்.  எனவே ஒரு கப் பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.  வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து வடிகட்டவும்.  வடிகட்டிய வெல்லப்பாகை ஒரு அடி கனமான் வாணலியில் விட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதையும் சேர்த்து, அடுப்பிலேற்றி, மிதமான தீயில் கிளறவும்.  பாகும், விழுதும் நன்றாகச் சேர்ந்து, கெட்டியாக சுருண்டு வரும் வரைக் கிளறி, சுக்குப்பொடியைத் தூவி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ அல்வா


அல்வா செய்ய வேண்டுமென்றால், மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, சுக்குப் பொடிக்குப் பதில் சிறிது ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ பாயசம் 


பாயசம் செய்ய மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, கடைசியில் ஒரு கப் தேங்காய்பாலைச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த சிறிதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள், முந்திரி,  ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.  தேங்காய்பாலிற்குப்பதில் சாதாரண பாலையும் சேர்க்கலாம்.

சோள ரவா கிச்சடி

தேவையானப்பொருட்கள்:

சோள ரவா - 1 கப்
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
இலவங்கம் - 2
பட்டை இலை - சிறு துண்டு
ஏலக்காய் - 1
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தண்ணீர் - 3 கப்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் சோள ரவாவைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வரை வறுத்தெடுக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கேரட், தக்காளி ஆகியவற்றை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் சோம்பு, பட்டை, இலவங்கம், பட்டை இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் சற்று வதங்கியவுடன், கேரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.  அதன் பின் தக்காளியைச் சேர்த்துக் கிளறி விட்டு, 3 கப் தண்ணீரை விட்டு, உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள சோளரவாவைக் கொட்டிக் கிளறி விடவும். வாணலியை மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். அவ்வப் பொழுது மூடியைத் திறந்துக் கிளறி விட்டு, தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.

சூடாக சடினியுடன் பரிமாறவும்.

பின்குறிப்பு:  இதில் பச்சை பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு போன்ற காய்களையும் சேர்த்து செய்யலாம்.

மாம்பழ சாம்பார்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நாட்டு மாம்பழம் (சிறிதாக இருக்கும்) - 4 முதல் 5 வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

ந்ண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 3  கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

மாம்பழத்தைக் கழுவி, இரண்டு பக்கமும் முக்கால் பாகம் கீறிக் கொள்ளவும். அடி பாகம் வரை வெட்டாமல், மாம்பழத்தின் அடி பாகத்தை அப்படியே வைத்துக் கீறிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை விட்டு, அதில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதித்து வரும் பொழுது மாம்பழத்தைப் போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ளப் பருப்பைச் சேர்த்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

பின்குறிப்பு: இந்த மாம்பழ சாம்பாருக்கு சின்ன சைஸில் கிடைக்கும் நாட்டு மாம்பழத்தை முழுதாகப் போட்டு செய்வார்கள். பெரும்பாலும் அவரவர் தோட்டத்தில் விளையும் பழத்தில், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம் என்று விதவிதமாக மாங்காய் சீசனில் செய்வார்கள் மார்க்கெட்டிலும் இந்த வகை நாட்டுப் பழங்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால், பெரிய மாம்பழத்தை (பெரிய துண்டுகளாகப் போட்டு) உபயோகித்தும் செய்யலாம். இந்த சாம்பாரின் சிறப்பு, மாம்பழச்சாறு சாம்பாருடன் கலந்து தனி சுவையைக் கொடுக்கும். சாம்பாரிலுள்ள மாம்பழத்தை சாப்பிட்டால், இனிப்பும், காரமுமாக அதும் ஒரு வித தனி சுவையுடன் இருக்கும்.


 
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...