மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

இந்த தளத்தில்

கேழ்வரகு அல்வா


தேவையானப்பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 முதல் 1 - 1/2 கப் வரை
பால் கோவா அல்லது பால் பவுடர் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 5

செய்முறை:

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் அதில் கேழ்வரகு மாவைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாசனை வரும் வரை வறுக்கவும்.

பின்னர் அதில் வெல்லப்பாகை விட்டு நன்றாகக் கிளறி விடவும்.

அல்வா சற்று கெட்டியாக ஆரம்பித்ததும் அத்துடன் பால் கோவாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் அதில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கலந்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவியக் கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.

பீட்ரூட் அல்வா


தேவையானப்பொருட்கள்:

பீட்ரூட் - 1
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும். கை விடாமல் அல்வா கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய், ஜாதிக்காய் தூள்களையும், வறுத்த முந்திரியையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.

தக்காளி கறிவேப்பிலைச் சட்னி


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை 4 அல்லது 5 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாயைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்தவுடன், இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி கடைசியில் தக்காளித் துண்டுகளையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து ஆற விடவும். பின்னர் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

காரட் சட்னி


தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
புளி - ஒரு நெல்லிக்காயளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

காரட்டைக் கழுவி, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும். கடைசியில் காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

கொத்துமல்லி சட்னி


தேவையானப்பொருட்கள்:

பச்சை கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 2
புளி - ஒரு பட்டாணி அளவு
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கொத்துமல்லித் தழையை நன்றாகக் கழுவி விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கொத்துமல்லித்தண்டோடு சேர்த்து அரைக்கலாம்.

நல்ல வாசனையோடு இருக்கும். இட்லி, தோசை மட்டுமின்றி, தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

குறிப்பு: புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றை சேர்க்கலாம். பித்தம், வாய் கசப்பு போன்றவற்றை நீக்க வல்லது.