• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கெட்டி உருண்டை


கெட்டி உருண்டை - இதை "பொரி விளாங்காய் உருண்டை" என்றும் கூறுவார்கள். இதுவே பெயர் மருவி, "பொருளங்காய் உருண்டை" என்றும் அழைக்கப்படுகிறது. கெட்டியாக (கடினமாக) இருப்பதால் கெட்டி உருண்டை. இதில் சேர்க்கப்படும் பொருள்களையெல்லாம் பொரித்து, பொடித்து, விளாங்காய் தோற்றத்தில் உருண்டை பிடிப்பதால் "பொரி விளாங்காய் உருண்டை". சிலர் "பொருள் விளங்கா உருண்டை" (இதில் போடப்படும் பொருள்கள், மற்றவர்களுக்கு விளங்காது) தான், பெயர் மாற்றம் பெற்றது என்றும் கூறுவார்கள். இதில் சேர்க்கப்படும் தானியங்கள், இடத்திற்கு இடம் மாறுபட்டிருக்கும். அடிப்படையான பொருட்கள், வெல்லமும், பச்சைபயறும்தான். இத்துடன் அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல், கோதுமை, அரிசி, பொட்டுக்கடலை போன்றவற்றைச் சேர்த்து செய்வார்கள். "சத்துருண்டை" என்ற பெயர் சரியானதாய் இருக்கும்.

தஞ்சை மாவட்டதில், பழங்காலத்தில், பயறை வெறும் சட்டியில் போட்டு வறுத்து, தரையில் கொட்டி, ஆறியவுடன், அதன் மேல் ஒரு கட்டையை வைத்து உருட்டி, தோலை பிரித்தெடுத்து, நன்றாகப் புடைத்து விட்டு, திருவையில் போட்டு அரைத்தெடுப்பார்கள். இப்பொழுது அதெல்லாம் முடியாது. அதனால் தோல் நீக்கிய பயத்தம் பருப்பை உபயோகித்து இந்த உருண்டையை செய்யலாம். அப்படி செய்தால் உருண்டை நல்ல நிறத்தில் இருக்கும். ஆனாலும், சத்து கருதி நான் முழு பயறை தோல் நீக்காமல் உபயோகித்து செய்துள்ளேன். நிறம் சற்று மங்கலாக இருந்தாலும், சுவையில் ஒன்றும் குறைவில்லை.

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 2 கப்
புழுங்கலரிசி - 1/2 கப்
பொட்டு கடலை - 1/2 கப்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 1/2 கப்
வெல்லம் (தூளாக்கியது) - ஒன்றரைக் கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் பச்சைப்பயறையும், அரிசியையும், தனித்தனியாகப் போட்டு, சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் பொட்டுக்கடலையைப் போட்டு, 2 அல்லது 3 நிமிடங்கள் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வறுத்த பயறையும், அரிசியையும் சிறிது சிறிதாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த்துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சவும். அடுப்பை நன்றாகக் குறைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில், 3 அல்லது 4 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு கரண்டி வெல்லப்ப்பாகை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்கவும். தட்டிலுள்ள மாவில் பாகு அதிகமாக தெரிந்தால், அதில் மேலும் சிறிது மாவைச் சேர்த்துக் கொள்ளவும். மாவு அதிகமாக இருந்தால் பாகைச் சேர்த்துக் கொள்ளவும். இப்படியே எல்லா மாவையும் பாகையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். சில சமயங்களில், பாகு அடுப்பிலேயே இருப்பதால் கெட்டியாகி விடும், அப்பொழுது ஓரிரு டீஸ்பூன் தண்ணிரைச் சேர்த்து பாகை கிளறி விடவும்.

மேற்கண்ட அளவிற்கு சுமார் 20 உருண்டைகள் கிடைக்கும்.

1 கருத்து:

R.Gopi சொன்னது…

கமலா மேடம்...

வெகு நாட்களுக்கு முன்பு இதற்கான ஆங்கில ரெசிப்பி தந்தீர்கள்.. அப்போது விரைவில் இதற்கான தமிழ் ரெசிப்பி தருவேன் என்றபடி இப்போது தமிழில் “பொரி விளங்காய் உருண்டை”க்கு ரெசிப்பி தந்து மகிழிவித்து விட்டீர்கள்..

உங்களுக்கு மிக்க நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...